ஞாயிறு, 9 டிசம்பர், 2018

அதுதான் நிதர்சனம்




உயிருக்கு உயிராக நேசித்த

உற்ற நண்பர்கள்

வாழ்ந்தது அந்தக் காலம்



காசை நேசிப்பவர்கள் இன்று

கூடிப்போனதால்

காணாமல் போனது நல்ல நட்பு



வளமாக வாழ்ந்தபோது

நம்மை புரிந்து கொண்ட

நண்பர்கள்



வறுமையில் வாடும்போது

நல்ல நண்பர்கள் யாரென்று

நமக்கு புரிய வைப்பார்கள்



எப்போதும் செலவழித்தால் தான்

மெயிலும், மொபைலும்

நாள் முழுதும் நண்பர்களாகும்



அறியாத வயதில்

அழுபவரைக் கண்டு தானும்

அழும் குழந்தையும் நண்பன் தான்



கிடைத்த மிட்டாயை

காக்காக் கடி கடித்துக் கொடுத்த

சிறுவனும் நண்பன் தான்



பக்கத்து இருக்கையில் அமர்ந்து

பண்ணும் சேட்டைகளுக்குதுணை

புரிந்தவனும் நண்பன் தான்



மக்களை மதித்து

மக்களுக்கு என்றும் உதவும்

மாமனிதனும் நல்ல நண்பன் தான்



நல்லவர்களாக நாமிருந்தால்

நல்ல நண்பர்கள் கிடைப்பது

நிச்சயம், அதுதான் நிதர்சனம்

உங்களுக்கும் நடக்கும்




குற்றங்கள் புரிவது

கொள்கையென கொண்டிருக்கும்

கயவர்களுக்குக்

குற்றங்களை நியாயப்படுத்த



தன் நிலை உணர்ந்து

தான் செய்த நல்லதைக் கூறி

நியாயப் படுத்த முடியாத

நேர்மையற்ற சிலர்



மற்றவர்களின் குற்றங்களை

மிகை படுத்தி பேசி—தான்

புரிந்த குறைகளும், குற்றங்களும்

பெரிதெனக் கருதாதவர்



பிறர் குற்றத்தைக் கூறி

இகழ்வதும், மனம் மகிழ்வதும்

நீங்கள் எப்படி செய்தீர்களோ—அப்படியே

நாளை உங்களுக்கும் நடக்கும்

சனி, 8 டிசம்பர், 2018

மனிதப் பிறப்பு




ஓடும் நதிகளை

மேடுகள் தடுத்தால்

நதிகள் ஓய்வதில்லை,

நகர்ந்து வேறுவழி தேடும்

பயணம் தொடரும்



தடைகள் என்பது

தவிர்க்க முடியாத ஒன்று,

தடைகளைக் கண்டு

தயங்கி நின்றவர்கள்

வெற்றி கண்டதில்லை



இரையோடு தரையில்

ஊர்ந்து சென்ற எறும்புக்கும்

தரை வெடிப்பு ஒரு தடையானது

இரையை வெடிப்பில் வைத்து

அதனை பாலமாக்கியது



பாலத்தில் ஏறி எறும்பு

பயணத்தைத்  தொடர்ந்தது

ஊரும் எறும்புக்கும்

வெற்றி கிடைத்தது

எறும்புக்கும் அறிவுண்டு



துன்பம் போக்கவும்

தரத்தை உயர்த்த சிந்திக்கவும்

தடைகள் பாடமாகும்,

தடையைத் தாண்டி

வந்தது தான் மனிதப் பிறப்பு

திருத்த இயலாது




வயிற்றுப் பிழைப்புக்கு

வழிகாட்டும் பெற்றோர்

வளரும் பிள்ளைகளுக்கு

வாழ்வியல் சிந்தனையை

விவரிக்காமல் போனதும்



நாட்டு பற்றையும்

நாட்டின் பண்பாட்டையும்

முதன்மைப் பாடங்களாக

மாணவர்களுக்குக் கற்று தராமல்,

அவர்களை ஆசிரியர்கள்

இயந்திரமயமாக்கியதும்



இயந்திரமயமானதால்

அன்பு,பாசம், மனிதநேயம்

அத்தனையும் தொலைந்துவிட

மாணவன், தான் மட்டும் வாழ

வழி தேடுவது வாடிக்கை



பெற்றோரும், ஆசிரியரும்

பள்ளி மாணாக்கர்களை

15 வயதுக்குள் திருத்தாவிடில்

அவர்களை அரசாலோ, சட்டத்தாலோ

ஒருபோதும் திருத்த இயலாது.




கையேந்துகிறது




வின்னையும், மண்ணையும்

இணைக்கும் மழைத்துளிகள்

பரிசுத்தமென

பறைசாற்றிக்கொண்டாலும்,

புகுந்த இடத்தால் தான்

பெருமையோ, சிறுமையோ

பெறுவதுபோல



கெடுக்க நினைக்கும் மாந்தரோடு

கூட்டு சேரும் மனிதர்களும்

கெட்டு போவதால்

கையூட்டு, ஊழல், திருட்டெல்லாம்

கை வந்த கலையாகி

கொலை, கொள்ளைகள்

கொடிகட்டி பறக்கின்றன



கும்கி யானை கொண்டு

காட்டு யானையை பிடித்தபோது

காட்டு யானை கேட்டது

தன் இனத்தைக் காட்டிக்கொடுப்பதும்

அடிமையாக்க உதவுவதும்

தவறு என்று தோனலையா?

தரம் தாழ்ந்து போகலாமோ! என்றது



வருத்தமுற்ற கும்கி யானை

வேதனையோடு சொன்னது

என்ன செய்ய?

மனிதர்களோடு சேர்ந்ததால்

காட்டிக் கொடுக்கும்

குணம் தனக்கும் வந்துவிட்டதென

குறைபட்டுக் கொண்டது


காட்டில் யானைகள்

கள்ளம், கபடு இல்லாமல்

சொந்தமாய் இரை தேடி

சுதந்திரமாய் திரிந்து வாழ்ந்தன

மனிதர்களிடம் சேர்ந்தபின் தான்

மானங்கெட்டு

காசுக்கும் கையேந்துகிறது

சனி, 24 நவம்பர், 2018

மேலும் காலியாக்கவா?




வெட்கமில்லாம
வெளிச்சமில்லா நேரத்தில
ஊரைக் கெடுக்க வந்தீர்களோ!

களவாட வந்ததுபோல்
கைகோர்த்து வந்து
கைவரிசை காட்டினீர்களோ!

இருவரும் ஆடிய ஆட்டத்தால்
இதயம் பறிகொடுத்த மரங்கள் சாய
மாற்றாக மக்களை தெருவில் நட்டீர்களோ!

ஆடிவிட்டு போனாலும்
ஊரையே அழித்து மக்களின்
சாவுக்கு வழிகாட்டலாமோ!

உங்கள் இருவரையும்
உயிர் காக்கும் தெய்வங்களாய்
உளமாற போற்றினோமே!

கண்ணுக்கு தெரியாத காற்றும்
மண்ணுக்கு பெய்த மழையும்
மீண்டும் பூம்புகாரை நினைவு படுத்துதோ!

படைத்தல், காத்தல், அழித்தல்
இயற்கையின் செயல்களென எண்ணி
அதில் உங்களையும் இணைத்தீர்களோ!

கஜாப் புயலே, நீ இங்கு வந்தது
காசுக்கு மக்கள் கையேந்தவா?—இல்லை
கஜானாவை மேலும் காலியாக்கவா?

சனி, 17 நவம்பர், 2018

குடில் தேடி வந்திடுவார்




நாண()யம் உள்ள

நல்ல மனிதர்போல்

நடிக்கும் இவரிடம்

நேர்மை இருப்பதில்லை



பொதுநலம் குறித்து

பொழுதெல்லாம் பேசுமிவர்

பத்திரமா சுயநலத்தை

பேணி காத்திடுவார்



பண்பு நிறைந்தவர்,

படித்தவரென்றாலும்

பணத்துக்காக

பேயாய் அலைந்திடுவார்



காந்தியத்தை நாளும்

கடைபிடிப்பதாய்க்

கூறும் இவர்

கள்ளத்தொழிலும் செய்திடுவார்



பரிவு காட்டுவதுபோல்

பாசம் பொழிவார்

பலன் இல்லையென்றால்

பாழும் கிணற்றிலும் தள்ளிடுவார்



சாதாரண மனிதர் நான்

சட்டத்தை மதிப்பவரென

சொல்லுவார்

சத்தியத்தை புதைத்திடுவார்



கொள்கைக்குக்

குரல் கொடுப்பார்பணம்

கொடுத்தால்

காற்றில் பறக்க விடுவார்



மக்களின் குறை தீர்க்க

மணு கொடுக்க சொல்வார்கொடுத்து

மாதங்கள் பல கடந்தாலும்

மௌனம் காத்திடுவார்



காணுமிடமெங்கும்

காட்சி தரும் பெருமகனார்

கழுத்து மாலையோடுஒரு நாள்

குடில் தேடி வந்திடுவார்.