வெட்கமில்லாம
வெளிச்சமில்லா நேரத்தில
ஊரைக் கெடுக்க வந்தீர்களோ!
களவாட வந்ததுபோல்
கைகோர்த்து வந்து
கைவரிசை காட்டினீர்களோ!
இருவரும் ஆடிய ஆட்டத்தால்
இதயம் பறிகொடுத்த மரங்கள் சாய
மாற்றாக மக்களை தெருவில் நட்டீர்களோ!
ஆடிவிட்டு போனாலும்
ஊரையே அழித்து மக்களின்
சாவுக்கு வழிகாட்டலாமோ!
உங்கள் இருவரையும்
உயிர் காக்கும் தெய்வங்களாய்
உளமாற போற்றினோமே!
கண்ணுக்கு தெரியாத காற்றும்
மண்ணுக்கு பெய்த மழையும்
மீண்டும் பூம்புகாரை நினைவு படுத்துதோ!
படைத்தல், காத்தல், அழித்தல்
இயற்கையின் செயல்களென எண்ணி
அதில் உங்களையும் இணைத்தீர்களோ!
கஜாப் புயலே, நீ இங்கு வந்தது
காசுக்கு மக்கள் கையேந்தவா?—இல்லை
கஜானாவை மேலும் காலியாக்கவா?
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக