பக்குவமில்லா மனம்.
குலவைப் போட்டு வந்த
கருத்த மேகக் கூட்டம்
கும்மியடித்துக் கொட்டித்
தீர்த்ததும்,
காய்ந்து கிடந்த காட்டாற்றில்
பாய்ந்து வந்த மழைநீர்
கரை தாண்டிக் குதித்து
ஓடியதும்,
சந்தைக்கு போன பொண்ணு
ஒத்தையாய் வந்து நின்னு
அக்கரை போகவேண்டி,அழுது
உதவிகேட்டதும்,
நெறி தவறா குருவும்
அவளை தோளில் சுமந்து
அக்கரை சேர்த்து உயிர்
காத்ததும்,
நினைவுக்கு வந்தன அத்தனையும்
ஆசிரமம் சென்றடைந்த சிஷ்யனுக்கு.
சிஷ்யன் கேட்டான்:
"இளம்பெண்ணைத் தொட்டு
தோளில் சுமந்தது
நமக்கு இழுக்கல்லவா!"
குரு சொன்னார்:
"நான் அந்த பெண்ணை
ஆற்றின் கரையிலேயே விட்டு விட்டேன்
நீ தான் இன்னும் அவளை
நெஞ்சில் சுமந்து கொண்டிருக்கிறாய்."
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக