வெள்ளி, 30 அக்டோபர், 2020

தலை எழுத்தா ?

 

இறைவனும் ,இயற்கையும்

இருப்பதோ ஒன்று போல

இருந்தும் நாட்டு நடப்பாட்டம்

வாழும் உயிர்களைக் காக்காம

ஒதுங்கி நின்று

ஒன்றை ஒன்று குறை கூறி

தப்பிக்க நினைப்பது

தரமானதா ? தவறானதா ? –இல்லை

தலை எழுத்தா ?

வெற்றி காணும்

 

நிலத்தில் விளைந்த

நெற்கதிர்கள்

முற்றியதும் தலை கவிழும்

மறக்காமல் மண்ணை நோக்கும்

அதுபோல

 

முதிர்வும், பக்குவமும் அடைந்த

மனிதரின் உள்ளம் என்றும்

அடக்கத்துடன் பணிந்து

அமைதியாய் காணும்

எளிமையாய் காட்சி தரும்

 

அன்போடு அடக்கமும்,

அச்சமின்மையும், சமூக நலனும்

இருக்கும் மனதில், நல்ல பண்பு

நிறைந்திருக்கும்அது

பணிவு தரும், வெற்றி காணும்

 

தங்காது

 

கஷ்டமும், நஷ்டமும்

மனிதனைத் திருத்தாதபோது

அறிவும், அடக்கமும் தங்காது

வியாழன், 15 அக்டோபர், 2020

சாமி சும்மா விடாது

 

சாதிகள் எப்போதும்

சமமாக அமராதிருந்தாலும்

சாதிக்க பிறந்ததுபோல்

சிம்மாசனம் ஏறும்

சாதித்துக் கொள்ளும்

 

சாமானிய மக்களைத் தான்

சாக்கடையில் தள்ளி

சாகசம் புரிவதற்கு

சாத்தானாக மாறும்

சன நாயகத்தை சீரழிக்கும்

 

சட்டத்தின் முன் எல்லோரும்

சமமென்று சொன்னாலும்

சரித்திரம்படைப்பதோ

சண்டியரும், அரசியலாரும் தான் ,

சமரசம் பேசுவதோ

சுடலையில் தான்

 

சோற்றுக்கு இல்லாம

சாகும் மக்களிடமா

சொல்லாதிக்கத்தைக் காட்டுவது !

சொன்னால் வெட்கம்

சொல்லாவிட்டால் துக்கம்

சாமி சும்மா விடாது.

நீ நல்லவனா ? கெட்டவனா ?

 

கொற்றவன் தந்த கொடை போல

கொரோனா தொற்றைக்

கொடுத்து உலகிலுள்ள மக்களைக்

கொன்று குவிக்கும் இறைவா !

கொடுக்காமலேயே நீ

ஒதுங்கி இருந்திருக்கக் கூடாதோ !

 

சாவைத் தடுப்பது போல் இறைவா

சாகசம் நீ புரிந்ததாய்க் காட்டி

சாகடித்த மக்கள் ஏராளம்,

சாகாத மக்களுக்கு பணி ஓய்வு தந்து

சம்பளமும் கொடுத்து ,சாகாமலேயே

சொர்க்கத்தைக் காண வைத்ததும்  உனது

சாதனை தானே !

 

தொப்புள் கொடி உறவு போல

தொற்றிய கொரோனா சுடுகாடு வரை

தொடர்ந்து வந்து உயிரை பறித்ததும் ,

தனி மனிதன் தன்னைக் காத்துக் கொள்ள

தனித்து இருத்தலும், முக் கவசம் அணிவதும்

தொடர் கதையாக்கி

 

மீதமுள்ள வாழும் மக்களை காத்து

மகிழ வைத்த மாயவனே !

மீண்டு வந்த மக்களின் பணிகளை

முடக்கி, வாழ்வாதாரத்தை பறித்ததால்

மரணத்தைத் தழுவும் நிலையிலுள்ள

மக்களுக்கு நரகத்தையும் காட்டிய

மாயவனே, நீ நல்லவனா ? கெட்டவனா ?

வெள்ளி, 9 அக்டோபர், 2020

வழி பிறக்கும்

 

முட்டையை உடைத்துக்கொண்டு

முழுமையாய் வெளி வரும்

ஆமை குட்டிகள் எவரின் தயவுமின்றி

ஆழ்கடல் நீரை நோக்கி தனித்தனியே

அடியெடுத்து வைக்கும்

அகிலத்தில் உயிர் வாழ-- அது

அறிந்து கொண்டது எப்படி ?

 

அன்னையின் அரவணைப்போ

ஆண்டவனின் பாதுகாப்போ

கற்றுகொண்ட அநுபவமோ

கல்வி கற்ற அறிவோ, ஏதுமில்லாம

ஒற்றையிலே நடந்து சென்று, நீரை

தொடும் , நீந்தி மகிழும்

யார் கொடுத்த வரம் ?

 

மண்ணில் பிறப்பெடுக்கும்

மானுடக் குழந்தைகளுக்கு

பூமியில் உயிர் வாழ

பெற்றவர்கள் உண்டு

பள்ளி ஆசிரியர்கள் உண்டு

பகவானும் உண்டு

அறிவுக்கு பஞ்சமில்லை

 

எல்லாமுமிருந்தும்

ஏன் இந்த அவல நிலை?

எங்கே குறையுள்ளது?

விதியென்று வாழ்வை வீணாக்காதே

உன்னையே முழுமையாய் நம்பு

துணிந்து செவ்வனே செயல் படு

துயரங்கள் விலகும்,வழி பிறக்கும்

சாவுக்கு இரையாவான்

நாளெல்லாம் திருநாளானால்

திருநாளுக்கேது மதிப்பு !

நடையெல்லாம் , நாட்டியமானால்

நாட்டியத்திற்கு ஏது மரியாதை !

 

வாழ்வில் உழைப்பும் வேண்டும்

ஓய்வும் வேண்டும்

அப்பொழுது தான் உழைப்பும்,

ஓய்வும் மதிக்கப்படும்

 

உழைப்பை மட்டுமே

உறுதியாய் பற்றி நிற்பவன்

பேராசைக்காரனாவான்—அதனால்

உடலும், உள்ளமும் கெடும்

 

ஓய்வை மட்டும் விரும்புபவன்

சோம்பேறியாய் மாறிடுவான்

சோற்றுக்கு வழியில்லாமல்

சோகம் சூழ, சாவுக்கு இரையாவான் 

வியாழன், 1 அக்டோபர், 2020

வாழ்வில் ஏற்றம் தரும்

 

ஒரு மனிதன் உட்காருவது

அவனுக்கு சாதாரண செயல் ,

ஆனால் யோகிகளுக்கு

அது உயர்வு தரும் செயல் ,

உட்கார்ந்து தியானம் செய்து

உயர்ந்த ஞானத்தை பெற்றிட

அவர்கள் எடுக்கும் மரபு அது,

போதி மரத்தடியில் அமர்ந்து

புத்தர் பெருமானும் ஞானம்

பெற்றதும் இப்படித்தான்

 

எழுந்து நிற்கிற செயலும்

எல்லா மனிதருக்கும்

சாதாரண செயல் தான்அதே

செயல் தவழுகின்ற குழந்தைக்கு

பெரியதொரு சாதனை ,

அற்பச் செயலென்று சொல்லுகிற

சாதாரண செயலும்

சிலருக்கு உயர்ந்த செயலாகும் ,

செய்வன திருந்தச் செய்தால்,

எந்த செயலும் வாழ்வில்

ஏற்றம் தரும்

 

இன்பம் தரும் எப்போதும்

 

ஏன் தாமதம் என்று கேட்பதை

எவரும் விரும்புவதில்லை

சரியான நேரத்திற்கு வர

முயற்சியுங்கள் என்றால்

ஏற்றுக் கொள்வார்கள்-- தாமதத்திற்கு

மன்னிப்பும் கேட்பார்கள்

 

அடக்கி ஒடுக்குவதால்

எவரையும் எளிதில்

பணிய வைக்க இயலாது --ஒருவரின்

பண்பும், பழகும் தன்மையும்

அன்பான பேச்சும்

காரியங்களை சாதிக்க உதவும்

 

சரியான அனுகுமுறை தான்

சாதனை படைக்க உதவும்,

நம் மதிப்பையும் உயர்த்தும்

நல்ல மனமும் , பண்பும்,

இனிய சொற்களும் இருந்தால்

இன்பம் தரும் எப்போதும்