புதன், 9 நவம்பர், 2016

வேறு எப்படி முடிக்க?


சுத்தி நின்னு பார்க்கிற
சொந்தமின்னும் சொல்லுற
கருகிப்போன பயிராலே—விளைநிலமே
காணாமப் போனாயோ!
யாரு செஞ்ச பாவம்னு
யாருக்கும் தெரியலையே

முடமான வாய்க்காலே
மழை நீரை புடிக்கிற
மக்களிடம் சேர்க்க நினைக்கிற
வழி தெரியாம நிக்கிற                                
யாரு செஞ்ச பாவம்னு
யாருக்கும் தெரியலையே

 வயலிலே நாளும்  உழைக்கிற
 ஊரோட பசி போக்கிற
 காவிரி சிறைபட்டதால்—உழவரே
 கடன் உன்னைக் கொன்றதோ!
 யாரு செஞ்ச பாவம்னு
 யாருக்கும் தெரியலையே

 விருந்துக்கு உயிர் கொடுக்கிற
 வாய்க்கு ருசி படைக்கிற
 உடலுக்கு வலு சேர்க்கிற—வீட்டு
 விலங்கா இருந்தும் புல்லுக்கு அலையுற
 யாரு செஞ்ச பாவம்னு
 யாருக்கும் தெரியலையே

 குடிநீருக்கு தவிக்கிற
 குடிக்க பானம் வாங்குற
 குடிச்சுட்டு நீ சாகிற—அதனாலே
 குடும்பமே சந்தியிலே
 யாரு செஞ்ச பாவம்னு
 யாருக்கும் தெரியலையே

 மாரி செஞ்ச பாவம்னு
 மாரிமேலே பழியபோட்டு
 மாரி அம்மனுக்கு படையிலிட்டு
 மறுபடியும் விருந்து வைத்து—மாரியை
 வேண்டிக்குவோம் எல்லோரையும் காக்க,
 வேறு எப்படி முடிக்க?



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக