ஞாயிறு, 19 நவம்பர், 2017

மெய் சிலிர்க்கும்




கண்ணியத்தின் திருஉரு
கடவுளின் விக்ரகம் போல்
காலத்தால் அழியாதது,
மனிதன் மதிக்கும்
மாபெரும் செல்வமிது,
மனிதனை இது மதிக்காது,
விலைபேசி இதனை வாங்கும்போது
உருமாறும், தலை கவிழும்

தன்னிகரற்றது,
தள்ளி போகாமல் இதனை
தன் பக்கம் இருக்க
விரும்பும் மக்கள்,
இதன் பக்கம் இருக்க யாரும்
விரும்புவதில்லை,
அனைத்துக்கும் காலக்கெடு உண்டு
இதற்கு மட்டும் இல்லை

சத்தியத்தை காக்கும்
சமூகத்தின் செல்லம்,
அரசனையும் ஆட்டிபடைக்கும்
அனைவரையும் தன்னுள் அடக்கும்,
தன்மானம் உள்ளது
தெய்வத்துக்கு நிகரானது,
எதற்கும் அஞ்சாதது
எப்போதும் தனித்து நிற்கும்

இறக்கும் தருவாயில்
இதழ்கள் உதிர்க்கும் சொற்கள்
மரணவாக்குமூலமென
முக்கியத்துவம் பெறும்போது
இதன் அருமை புரியும்
அதுதான் உண்மையென
மனம் அறியும்,
மெய் சிலிர்க்கும்


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக