காவிரி படுத்துறங்க
ஆறுகளும்
சேர்ந்துறங்க
ஓடாத ஆற்றையெல்லாம்
ஓடவைக்கும்
சாக்கடைகள்
சாக்கடையின்
சங்கமத்தில்
காற்றும், நீரும்
மாசுபட்டு
நோய் வந்த கொடுமையினை
சாலை மறியல்
சொல்லலையோ?
ஆடியில ஓடிவரும்
காவிரி
அரசாணை வந்தும் கூட
ஆவணியில் தடம் பதித்து
பலனின்றி போகலையோ?
விஷம் இறங்கிய
காய்கறிகள்
விலையேறிப் போனதால
நிலைகுலைந்த
மக்களுக்கு
நோய் வந்து சேரலையோ?
விரைவு உணவென
வெளிநாட்டின் பெயரோடு
காலூன்றிக் கொல்லும்
உணவுக்கு
எமனோடு என்ன உறவோ?
பாரத தேசத்து
மக்களின்
பேராசை சுமை போல
பள்ளி சிறார்களின்
எடையும் குறையாதோ?
தொலைபேசி, கணினியால்
தொற்றும்
கதிர்வீச்சும்
தொடரும் பாலியல்
வன்மமும்
தொலைந்து போகாதோ?
ஊரெல்லாம் மழை பேஞ்சு
தாவரங்கள்
எழுந்தாலும்—மக்களுக்கு
சோறும், நோயற்ற
வாழ்வும்
நாள்தோறும் கிடைக்க
வேண்டாமோ?
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக