செவ்வாய், 17 மே, 2016

கொடுத்தனுப்ப.


கண்ணான கணவன்
கண்மூடி போனபின்னே
கால்வயிற்று கஞ்சிக்குக்
கதியற்று நின்றபோது
கண்ணீர்விட்ட கதை

பெத்தபிள்ளை இருக்கையிலே
பாசத்தை காட்டலையே
விளக்கேத்த வந்த பொண்ணு
வீதிக்கு விரட்டியபோது
வயிறு பத்தியெரிந்த கதை

குடிமுழுகி போனதுபோல்
கலங்கும் நெஞ்சமதில்
கவலையெல்லாம் குடியமர
வயிற்று பசியாலே
வாழ்விழக்க துணிந்த கதை

பரமன் வாழவழி காட்டினால்
பசியை விரட்டிவிடலாம்,
பசி ஜெய்ச்சுதுன்னா
பிராணனை விட்டுவிடலாமென
வைராக்கியம் எழுந்த கதை

வழிபட்ட இறைவன் வழிகாட்ட,
வருவோர், போவோர்
வந்து இளைப்பாறும்
வேப்பமர நிழலில்
கேப்பங்கூழ் வியாபாரம்

தினந்தோறும்
தனியொரு மனுஷியாய்
தள்ளாத வயதிலும் பாடுபட்டு
தன்னையே காக்கும் பாட்டிக்கு
வயது அறுபத்தாறு

பேரப்பிள்ளையின்
பிறந்தநாள் நினைவுக்கு வர
புதுசட்டை எடுத்து
காத்திருக்கிறாள்
கூப்பிடாத வீட்டுக்குக்

கொடுத்தனுப்ப.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக