ஞாயிறு, 29 மே, 2016

மாந்தருக்கு விளங்கலையே!



தவறான பாதையில்
தான் சேர்த்த பணத்தால்
தானதர்மம் செய்வதுபோல்,
வானம் களவாடி எடுத்த நீரை
புவிக்கு நன்கொடையாய்
வாரி வழங்கி பேரெடுக்கிறது

மற்றவர் ஒதுங்கி நின்று
மழையை இரசித்திருக்க,
அநாதை சிறுவன் மட்டும்
அம்மழையில் விளையாட
பெரியவர் கேட்டார்—மழையில்
ஏன் நனைகிறாய் என்றார்

நான் மழைக்கு
நன்றி சொல்லிக் கொண்டிருக்கிறேன்,
அதுமட்டும் தான் என்னை
அன்று முதல் இன்று வரை
தொட்டு பேசி விளையாடுமென்று
சொல்லி மகிழ்ந்தான் சிறுவன்

சாதி, மதம், இனமென பிரித்து
சாதிக்க நினைத்த அறிவுக்கு
எல்லோரும் உடன்பிறப்பென்று
எண்ணத்தெரியலையோ!—உலகில்
மனிதர்களை வேறுபடுத்தி
மனிதத்தை அழித்தது முறையோ!

அனைவரும் நலமாய் வாழ
அவனியில் பெய்யும் மழை
சாதி,மதம் பார்ப்பதில்லை,
எல்லோரும்  பயனடைய
இயற்கை தந்த வரமென
உணர்த்துவது மழை

மழைத்துளிகள் என்றுமே
மண்ணில் தனித்திருப்பதில்லை
துளிகள், நதியாகிக் கடலாகி
உலகில் ஒற்றுமையை பறைசாற்றும்
மழை அறிந்த மனிதம்கூட
மாந்தருக்கு விளங்கலையே!


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக