வெள்ளி, 6 மே, 2016

மகுடம் சூடலாமோ!

வழி தவறா வாழ்க்கைக்கு
வடிவமைத்த சட்டங்கள்
புனிதமானது,
படைத்தவனேயானாலும்
மதித்து நடப்பது—நேர்மை
மரணப்படாதிருக்கவேண்டி

சட்டமெனும் சட்டையை
போட்ட பாம்பை பார்த்ததில்லை
கழற்றி போட்டதை
கண்ட சுயநலவாதிகள்—சட்டையை
களைந்து வீசினரோ!

பிறந்தநாள் விழாபோல
வாழும் சனநாயகத்துக்கு
உற்றார், உறவினர் சூழ
அய்ந்தாண்டுக்கு ஒருமுறை
அரங்கேறும் வைபவம்

மனிதனை தெய்வமாக்க
மக்கள் நடத்தும் வேள்வி,
மனிதனாயிருக்கும் வரை
மக்கள் வணங்கப்படுவர் வேள்விக்காக
தெய்வமானபின்—கரிசனமும்,
தரிசனமும் இல்லாமல் போகும்

வாக்குறுதிகள்—அழியாத
வரலாற்று பொக்கிஷங்கள்
அடுத்தடுத்த தேர்தலிலும்
அயராது வந்து
முகம் காட்டி மகிழும்
மாற்றம் ஏதுமின்றி

தூண்டிலில் வைக்கும் உணவுக்கு
தூண்டப்படும் மீன்
உயிரை இழப்பதுபோல்
வாக்கு வியாபாரப் பொருளானால்
வறுமையில் வாடும் ஏழைகளின்
வாழ்க்கை உயருமா?

காலம், காலமாய்
குடிநீருக்கு தவிக்கும் மக்களின்
இன்னலைப்போக்காமல்—நவீன
இலவசங்களில்
மக்களை மயங்கவைத்து
மகுடம் சூடலாமோ?


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக