புதன், 29 அக்டோபர், 2014

அவனாவது மகிழ்ந்திருக்கட்டும்


குளிருக்கு பயந்து

குடிபெயர்ந்த மேகம்

மழையாய் உருமாற

 

பெய்த மழையோ

பெரு வெள்ளமாகி

ஊரையே மூழ்கடித்ததும்

 

தெருவோடு ஊரும்

பயிரோடு வயலும்

பாழாய்ப் போனதும்

 

வழியற்று வாடும்

ஏழையின் வயிற்றில்

மண்ணள்ளிப் போட்டதும்

 

மழையின் சிறுதுளி

நதியாகிக் கடலாகி

ஒன்று படுவதுபோல்

 

ஒற்றுமையாய் வாழக்

கற்று கொடுத்து—ஊரையே

சிதறிட செய்ததும் முறையோ?

 

வெள்ளப் பெருக்கால

வெளியேறி ஊர்மக்கள்

வேதனையில் மூழ்கிக்கிடக்க

 

மழையில் விளையாடி

மகிழும் சிறுவனிடம்—மகிழ்வின்

காரணம் கேட்டேன்

 

மழை மட்டும் தான்

என்னை தொட்டு பேசுமென்றான்

ஒன்றும் சொல்லாதீர்கள்

அவனாவது மகிழ்ந்திருக்கட்டும்.

 

 

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக