வெள்ளி, 26 ஆகஸ்ட், 2016

கொடுக்க மனமில்லையோ!

மண்ணில் வாழ் மந்தருக்கு
மாயவன் தந்த பரிசு
குடும்பமெனும் வாழ்க்கை,
ஆண்டவனுக்குக் கோவில் போல்
ஆன்மாக்களுக்கு ஒரு குடும்பம்

கடவுளை வழிபட்டு
கோவிலில் உட்கார்ந்திருந்த போது,
அருகில் அமர்ந்திருந்த பெரியவரை
அறிமுகம் செய்து வைத்தார்
அருமை நண்பர்

“ இவர் ஒரு கோடீஸ்வரர்
இப்ப கோவிலே கதின்னு
இங்கேயே தங்கிவிட்டார்,
சிறகொடிந்த பறவைபோல
உறவுகளை இழந்து தவிக்கிறாரென்றார்”

பத்து வருடங்கள் முன் வீட்டம்மா
போய் சேர்ந்ததும்—வணிகத்தில்
பக்கபலமாயிருந்த
ஒற்றை மகனும் மாரடைப்பால்
ஓராண்டுக்கு முன் மாண்டு போனதால்

ஆதரவற்று அநாதையானார்,
அளவில்லா சொத்து
அரண்மனைபோல வீடு
அனைத்தையும் துறந்து—ஆண்டியாய்
ஆலயம் வந்து அமர்ந்துவிட்டார்

கொடுத்ததை வாங்கி உண்பார்
கிடைக்காதபோது பட்டினி—இறைவா
கோடி கொடுத்ததைவிட, அவருக்குக்
கோணாமல் குடும்ப வாழ்வை
கொடுக்க மனமில்லையோ!


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக