சனி, 28 அக்டோபர், 2017

பாதுகாப்பவளும் இவளே!



காதல் மோகத்தால்
கூட வந்தவள்,
கைபிடித்தவனை விட்டு
கணநேரமும் பிரியாத
கைகாரி,
சின்ன வீடுபோல
சொந்தமானவள்

படுக்கையிலும் கூட
படுத்துக்கொள்வாள்,
நாணம் கொள்ளாத
நவநாகரீக மங்கை,
கைக்குள் அடங்கும்
கச்சித உடல்வாகு—பையையும்
காலியாக்கிடுவாள்

மூத்தாளின் கோபத்தில்
முகம் சிவக்கும்,
சமையல் பாத்திரங்கள்
சிறகில்லாமல் பறக்கும்,
இவளோட சினத்தில்
இவள் தேகம் வெடிக்கும்
அடுத்தவர் முகம் கருக்கும்

கூகுள் இவளின் தோழி
கூடி இருவரும்
அறிவுக்கு விருந்தாகும்
அரிய செய்திகளை
அள்ளி கொடுத்தாலும்
பள்ளி பிள்ளைகளின் மனதை
பாழாக்கிக் கெடுப்பதுமுண்டு

இளைஞர்களுக்கு
இதயராணி
முதியவர்களுக்கு இவள்
உதவிடும் ஊன்றுகோள்,
தொலைதூர உறவை
தொலைந்துபோகாமல்

பாதுகாப்பவளும் இவளே!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக