நம்ப மறுக்கும்
இருந்தும் மனம் நாடும்
அதிர்ஷ்டம்,
உழைப்பின் வெகுமதி
உயிர் வாழ உதவும்
பணம்,
உணவின்றி தவிக்கும்
பட்டினியில் வாடவைக்கும்
வறுமை,
இந்த மூன்றும் வரும் போகும்.
கற்றதில் பெற்ற
அழியாத செல்வம்
கல்வி,
நல்ல பண்பாலும்
தவத்தாலும் அடைந்த
ஞானம்—இந்த
இரண்டும் வந்தால் போகாது.
வறுமையில் இருப்போர்க்குக்
கொடுக்கும் ஈகையால்
கிடைக்கும் புண்ணியம்,
பிறருக்கு தீங்கிழைக்கும்
கொடிய செயலால்
வரும் பாவம்--இந்த
இரண்டும் போனாலும் வரும்.
நன் நடத்தையால்
நாடி வந்து சேரும்
மானம்,
மண்ணில் வாழ்வதற்கு
மேனி தேடும்
உயிர்—இந்த
இரண்டும் போனால் வராது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக