வியாழன், 21 ஜனவரி, 2016

பெரும்பாவம்

விளை நிலத்தில்
விழுகின்ற வியர்வைத்துளிகள்
விளக்கேற்றி வைக்காமல்
வேதனை பட வைத்ததும்

வெள்ளத்தில் அழிந்த பயிரால்
உள்ளத்தில் விளைந்த சோகத்தை
இறக்கிவைத்து ஆறுதல் கூறாமல்
விழிகள் கண்ணீர் வடித்ததும்

மேகம் பொழிந்த மழையால்
மண்ணு செழித்தாலும்
மனித வியர்வையும் காரணமென்பதை
மக்கள் நினைக்க மறந்ததும்

பார்த்து வியக்கும் படைப்பெல்லாம்
பூமியில் வாழும் மனிதர்கள்
சிந்திய வியர்வைத்துளிகளால்
சாதித்ததென எண்ணாததும்

பூவாசமும், உணவின் சுவையும்
புரிந்துகொள்கிற நமக்கு
உழைப்பவரின் வியர்வைதரும் வலியை
உணராதது பெரும்பாவம்


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக