தீயே உனக்கு தீ இல்லையா?
கொழுந்து விட்டு எரிந்தத்தீயே
கொழுந்துகளை விட்டு விட்டு எரிந்தாலென்ன?
தென்னங்கீற்றுகளே தொன்மையின் சின்னங்களே
சின்னஞ்சிறுசுகளின் சன்ன ஒலி கேட்கலையா?
சரிந்து விழுந்தீகளே
அரவணைக்கவா இல்லை அள்ளிக்கொல்லவா?
பொத்தி வளர்த்த பாலகனே
புரியாத பருவம் உனக்கு அறியாத வயது
புகை பிடித்தால் இறந்து போவாய்
புரியவைக்க ஆசிரியர் இல்லை
ஆசானானது நெருப்பு
பாடமாகிப் போனாய் மக்களுக்கு.
ஊரு சனம் உறங்கலையே ஓல சத்தம் நிக்கலையே
மனம் கேட்கலையே என் சினம் ஆறலையே
தீக்கு அறிவு என்ற பொருளில்லையா
தீயே உனக்கு தீயில்லையா?
அன்று கோவலன் இறக்க மதுரை எரிந்தது
இன்று கும்பகோணம் எரிய குழந்தைகள் இறந்தனர்
இரண்டிலுமே இறந்தவர்கள் குற்றமற்றவர்கள்.
குழந்தைத் தெய்வங்களுக்கு நினைவாஞ்சலி
பெற்றோர் உற்றாரின் கண்ணீரஞ்சலி
மற்றோரின் மலரஞ்சலி
வஞ்சகத்தீயும் கண்ணீர் விட்டது
மெழுகுவர்த்தியின் மேல் இருந்துகொண்டு.
(கும்பகோணத்தில் நிகழ்ந்த பள்ளி தீவிபத்தின் நினைவாக.)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக