வியாழன், 12 ஜூன், 2014

தீர்மானிக்கப்படுகிறது..


முடிவுக்குக் காத்திருக்கும்

முதுமையுற்ற தாயொருத்தி

இடையிலே துணியிருந்தும்

ஆடை மறைக்காத

அங்கங்கள் அங்கங்கே,

 

ஒட்டாத உறவுகளால்

ஒத்தையாய் போன அவள்

இல்லாத உணவுக்கு

இறவாத உயிரோடு—கையேந்தி

இறைவனின் வாசலிலே,

 

தாண்டி செல்லும் பக்தர்கள்

ஏதும் கேட்காத கடவுளுக்கு

பழத்தோடு தேங்காயும்

பத்தி,சூடத்தோடு மாலையும்

தட்டில் வைத்து ஏந்தியபடி,

 

எந்த இடமானாலும்

எதிர்பார்ப்புகளால்

கிடைக்கப் பெறுவதில் தான்

கொடுக்கப்படுவது

தீர்மானிக்கப்படுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக