வியாழன், 29 ஜனவரி, 2015

பேருந்து நிலையம்


அந்தி சூரியனின்

அலங்கார விரிப்புகளால்

அழகு சேர்க்கும் வானம்

அதை சிதைப்பதுபோல்

வண்ணப் பொலிவிழந்து

வாடி நிற்கும் பேருந்து நிலையம்

 

குண்டும் குழியுமாய்

சுற்றியுள்ள சாலைகள்

சுகமற்றுக் கிடக்கக்

குலுங்கிக் குலுங்கி

அழுதுபோகும்

புராதன பேருந்துகள்

 

சுகமற்ற சாலைக்கு

மருந்து கொடுக்க எண்ணி

மேகம் தந்த மழையால்

பக்கவிளைவாகி

வழுக்கி விழுந்து, காயப்பட்டு

வேதனைபட்டதும் பயணிகளே!

 

பயணம் சிறக்க

பகவானை வேண்டி—உண்டியலில்

காசு போடும் பயணிகள்

சோற்றுக்கு வழியின்றி

தவிக்கும் ஏழைகளைக்

கண்டு கொள்ளாதது முறையோ?

 

எப்போதும்போல்

மாறாத பண்போடு

சாலைகள்,பேருந்துகள்,

பேருந்து நிலையங்கள்—மாறிவிட்டார்கள்

பயணிகள் மட்டும், தினமும்

செத்து செத்து பிழைப்பதால்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக