புதன், 19 மார்ச், 2014

நல்லவன் யாருண்டு?


எங்க

ஊரு திருவிழாவில்

ஊர் கூடி மகிழும்.

கங்கை ஓடும்

காசியிலோ

நாள்தோறும்

திருவிழா.

 

புண்ணிய காசியிலோ

பல்லி சொல்லாது

பூவு மணக்காது

பிணவாடை இருக்காது

மாடு முட்டாது

கழுகு பறக்காது

அத்தனையும் உண்மை

 

புனிதக் கங்கையிலோ

விடப்படும் பிணம்

வீசப்படும் பூமாலை

கரைக்கப்படும் அஸ்தி

கலையப்படும் பாவம்

கொட்டப்படும் பிரசாதம்

அத்தனையும் சுமந்து

மாசற்ற புனித நீராய்

காட்சி தரும் கங்கை.

 

பூலோக மாந்தரோ

காசியில கால் பதித்து

கங்கையில நீராடி

கடவுளை வழிபட்டு

பாவத்தைத் தொலைத்து

புண்ணியம் பெற்றாலும்

வாழும் மாந்தரில்

நல்லவன் யாருண்டு?.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக