புதன், 12 மார்ச், 2014

எப்படி போகுமோ?


மற்றவர் சொல் கேட்டு

மனம் மாறி

பெண் சிசுவைக் கொல்லும்

பெற்ற தாயைப்போல்

காவிரியே நீயுமா?

 

பாலூட்டி வளர்த்த நீ

பாலுக்கு அழவைத்து

பட்டினியில் சாவதை

பாராமல் இருப்பது

தாயே நியாயமா?

 

வறண்டு போகும்

பூமியாய்

உருமாறும் தமிழகம்

குடம் தண்ணீர்- ரூபாய்

ஆறு மட்டுமாம்.

 

தண்ணீருக்கு மக்கள்

குடங்களோடு சாலைக்குக்

குடியேற

காட்டு விலங்குகள்

நீர் தேடி ஊருக்குள்.

 

போராடி பெற்ற

சுதந்திரத்தால்

விடுதலை ஆனது

ஏழை மக்களின்

உயிர்கள் தான்.

 

ஒரு தலைமுறை

முடிந்த வேளையில்

இந்த நிலையென்றால்

ஏனைய காலங்கள்

எப்படி போகுமோ?

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக